நல் உறவு!
மலையோரம் அடிவாரம்
குளமொன்றை வெட்டி
வைத்தோம்
மழை பொழிந்து
நீர் நிரம்ப
மலையினிலே வளர்ந்திருந்த
நெடிதுயர்ந்த மரமெல்லாம்
சுட்டெரிக்கும் வெயிலினிலே
பட்ட மரம்
ஆனதம்மா
மரங்களிலே கூடுகட்டி
முட்டையிட்டு அடைகாத்து
குஞ்சு பொரித்த
பறவை எல்லாம்
பட்ட மரத்தை
விட்டதம்மா
எதிர்பாரா வேளையிலே
எட்டு நாட்கள்
கொட்டி தீர்த்த
கொடுமழையில் குளம்
நிறைந்து
கரை தழும்ப
அலையடிக்குது
பட்டமரம் துளிர்விட்டு
பச்சை நிற
இலை விட்டு
படுத்திருக்கும் மலை
மேனி
பசுமைக்குள்ளே மறைந்திருக்குது
கரையோரம் கருகிப்
போன
கொடி செடியும்
புல் பூண்டும்
மழை நீரில்
உயிர் பெற்று
தலையாட்டி அழகை
கூட்டுது
குளத்து நீரில்
மீன் இனங்கள்
குதித்து துள்ளும்
அழகை கண்டு
ரசித்த பறவை
ருசித்து பார்க்க
கொத்தி சென்ற
அழகு ரசிக்குது
நீரிருந்தால் மீன்
வளரும்
மீனை தின்ன
பறவை வரும்
மீனில்லா வேளையிலே
பறவைக்கென்ன வேலையங்கே?
பணமிருந்தால் உறவு
வரும்
உறவுக் கெல்லாம்
பாசம் வரும்
பணமில்லா வேளையிலே
உறவெல்லாம் வேஷமிடும்
போவதற்கு இடமின்றி
பொசுங்கி வாடும்
புல் போலே
காசில்லா வேளையிலும்
பாசம் காட்டும்,
நல் உறவு!!
புகைப்படம்: திரு.பாபுமனோகரன் பால்வில்லியம்
- ஜெயக்குமார் சுந்தரம்
‘

No comments:
Post a Comment